Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, January 14, 2009

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை - TPV30

திருப்பாவையின் 30-வது பாசுரம்

இந்த முப்பது பாடல்களையும் பாடுவோர் அடையும் பேரின்பம்

சுருட்டி ராகம், ஆதி தாளம்

இப்பாசுரம் ஆண்டாள் (கோபியர் வாயிலாக அல்லாது) நேரடியாகப் பாடுவது போல் அமைந்தது. சூடிக் கொடுத்த நாச்சியாரின் பிரபந்தம் சாற்றுமுறை நிலைக்கு வருகிறது. திருப்பாவை நிறைவு அடையும் இத்தினம் ஒரு புண்ணிய தினமாகும். இப்பாசுரத்தில் ஆண்டாள் தரும் செய்தி அடியார்கள் அனைவருக்கும் மோட்ச வழி காட்டும் ஒளி விளக்காக அமைகிறது !
Photobucket - Video and Image Hosting
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை*
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி*
அங்கப் பறை கொண்ட ஆற்றை* அணி புதுவைப்-
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன*
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே*
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரைத்தோள்*
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்*
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
Photobucket - Video and Image Hosting Photobucket - Video and Image Hosting
பொருளுரை:

அழகிய கப்பல்கள் உலாவும் திருப்பாற்கடலை, மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி என்ற அரவத்தை கயிறாக்கிக் கடைந்த பரமமூர்த்தி, கேசவன் (அழகிய சுருண்ட நீள்முடி கொண்டவன்) மற்றும் மாதவன் (திருமகளின் கணவன்) என்று திருநாமங்களைக் கொண்டவன். சந்திரனை ஒத்த அழகிய முகத்தை உடைய, அழகிய ஆபரணங்களை அணிந்த, இடைச் சிறுமியர், அப்பிரானை அடைந்து திருவடி பணிந்து, அவனது சன்னிதியில், தாங்கள் வேண்டிய பறையைப் (தங்கள் புருஷார்த்தத்தைப்) பெற்ற அந்த செய்தியை விளக்கி,

அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் திரு அவதரித்தவளும், அன்றலர்ந்த தாமரை மலரால் ஆகியகுளிர்ந்த மாலையை அணிந்த பட்டர்பிரானின் (பெரியாழ்வார்) திருமகளும், ஆன கோதை நாச்சியார், அருளிச் செய்த சங்கத் தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரங்களை, குறையில்லாமல் ஓதும் அடியார்களுக்கு

நான்கு பெருமலைகளை ஒத்த திருத்தோள்களையும், சிவந்த திருக்கண்களையும், அழகிய திருமுகத்தையும் கொண்ட, அனைத்துச் செல்வங்களுக்கு அதிபதியான திருமால், இம்மையிலும், மறுமையிலும் கருணை காட்டி, (அவன் சேர்க்கையால்) பேரானந்தத்தை அருளுவான் !

பாசுரங்கள் 30 - ஒரு பார்வை:

முதல் பாசுரத்தில், நோன்புக்கான நேரம், நோன்புக்கான மூலப்பொருள் (கிருஷ்ணன்) குறித்தும்,

2-வது பாசுரத்தில், நோன்பின்போது செய்யத் தகாதவை பற்றியும்,

3-வது பாசுரத்தில், நோன்பினால் விளையும் நன்மைகள் குறித்தும்,

4-வது பாசுரத்தில், மழைக்காக வருணனை வேண்டியும்,

5-வது பாசுரத்தில், நோன்புக்கு ஏற்படக் கூடிய தடைகளை கண்ணனே நீக்க வல்லவன் என்று போற்றியும்,

6-வது பாசுரத்திலிருந்து 15-வது பாசுரம் வரையில், கோகுலத்தில் வாழும் கோபியரை, உறக்கம் விட்டெழுந்து, கண்ணனைத் தரிசித்து வணங்கச் செல்லும் அடியார் கூட்டத்தோடுச் சேருமாறு விண்ணப்பித்தும்,

16-வது பாசுரத்தில், நந்தகோபர் மாளிகையில் உள்ள துவார பாலகரை எழுப்பி, உள் செல்ல அனுமதி வேண்டியும்,

17-வது பாசுரத்தில், நந்தகோபர், யசோதா பிராட்டி, கண்ணபிரான், பலராமன் என்று நால்வரையும் விழித்தெழுமாறு வரிசையாக விண்ணப்பித்தும்,

18-வது பாசுரத்தில், நப்பின்னை பிராட்டியை மிக்க மரியாதையுடன் விழித்தெழ வேண்டியும்,

19-வது மற்றும் 20-வது பாசுரங்களில், நப்பின்னை, கண்ணன் என்று, ஒரு சேர, இருவரையும் உறக்கம் விட்டு எழுமாறு விண்ணப்பித்தும்,

21-வது மற்றும் 22-வது பாசுரங்களில், (கோபியர்) கண்ணனின் கல்யாண குணங்களைப் போற்றியும், தங்கள் அபிமான பங்க நிலைமையை ஒப்புக் கொண்டும், கண்ணனின் அருட்கடாட்சத்தை மட்டுமே (தங்கள் சாபங்கள் ஒழிய) நம்பி வந்திருப்பதையும்,

23-வது பாசுரத்தில், கிருஷ்ண சிம்மத்தை அவனுக்கான சிம்மாசனத்தில் அமர வேண்டியும்,

24-வது பாசுரத்தில், அம்மாயப்பிரானுக்கு மங்களாசாசனம் செய்தும் (திருப்பல்லாண்டு பாடிப் போற்றியும்),

25-வது பாசுரத்தில், (கோபியர்) தங்களை ரட்சித்து அரவணைக்க அவனைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று உணர்த்தியும்,

26-வது பாசுரத்தில், நோன்புக்கான பொருள்களை கண்ணனிடம் யாசித்தும்,

27-வது பாசுரத்தில், பாவை நோன்பு முடிந்ததும், (கோபியர்) தாங்கள் வேண்டும் பரிசுகளை பட்டியலிட்டும்,

28-வது பாசுரத்தில், (கோபியர்) தங்களது தாழ்மை, கண்ணனின் மேன்மை, அவனுடனான பிரிக்க முடியாத உறவு, தங்களது பாவ பலன்களை நீக்கக் கோருதல் ஆகியவை பற்றியும்,

29-வது பாசுரத்தில், எந்நாளும் பிரியாதிருந்து கண்னனுக்கு கைங்கர்யம் செய்வதற்கு அருள வேண்டியும்,

30-வது பாசுரத்தில், திருப்பாவை சொல்லும் அடியார்கள் கண்ணபிரானின் அன்புக்கும், அருளுக்கும் பாத்திரமாகி, பேரானந்தம் அடைவர் என்ற செய்தியை வெளியிட்டும்

30 அற்புதமான பாசுரங்கள் வாயிலாக, முதற்பாடலிலிருந்து இறுதிப் பாசுரம் வரை, தொடர்ச்சியும் ஓட்டமும் பங்கப்படா வகையில், கோதை நாச்சியார், ஒரு கிருஷ்ண காவியத்தையே படைத்துள்ளார் ! இனிய எளிய தமிழில் வேத சாரத்தை உள்ளர்த்தங்களில் வெளிப்படுத்தும் திருப்பாவை, 'கோத உபநிடதம்' என்று போற்றப்படுகிறது !

பாசுரச் சிறப்பு 1:

1. இங்கே "வங்கக் கடல் கடைந்த"வனை 'மாதவன்' என்று ஆண்டாள் அழைக்கக் காரணம், அவரது ஆச்சார்யனும், தந்தையும் ஆன பெரியாழ்வாரின் உபதேசத்தை மனதில் வைத்தே என்று ஒரு கருத்துண்டு, அதாவது, பெரியாழ்வார் பாடியது போல, "மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்பதோர் தெய்வத்தை நாட்டி" ! மேலும், மாதவன் என்பதற்கு பிராட்டியோடு கூடி இருப்பவன் என்று பொருள் இருப்பதால், திருப்பாற்கடலைக் கடைந்து அப்போது தோன்றிய திருமகளை தன் திருமார்பில் தரித்துக் கொண்ட அம்மாயப்பிரானை 'மாதவன்' என்றழைப்பது பொருத்தமாகிறது !

2. 'கேசவன்' என்ற திருநாமம் பரமனது பரத்துவத்தை உணர்த்துகிறது. கேசவனில் உள்ள 'க' சப்தம் பிரம்மனையும், 'சவன்' ஈஸ்வரனையும் குறிக்கின்றன. அதாவது, பிரம்மனும், சிவனும் திருமாலுக்குள் அடக்கம் என்பதைச் சொல்கிறது.

3. "வங்கக்கடல் கடைந்த" என்ற திருச்செயல், அடியார் மேல் பரமனுக்குள்ள வாத்சல்யத்தையும், பரமனது எங்கும் வியாபித்திருக்கும் நிலையையும் உள்ளர்த்தமாக கொண்டிருப்பதாக பெரியோர் கூறுவர்.

4. 'பட்டர்பிரான் கோதை சொன்ன' என்று அறிவிப்பதன் மூலம், தன் தந்தையே தன் ஆச்சார்யன் என்பதை உணர்த்துகிறார், சூடிக் கொடுத்த நாச்சியார் ! மதுரகவியாழ்வாரும், "தென்குருகூர் நம்பிக்கு அன்பானை மதுரகவி சொன்ன சொல்" என்று பாடியே, கண்ணிநுண் சிறுத்தாம்பை நிறைவு செய்துள்ளார். ஆகையால், ஆண்டாளின் திருப்பாவையும், மதுரகவியின் கண்ணிநுண் சிறுத்தாம்பும் ஆச்சார்யனை முன்னிறுத்தியதால், தனிச்சிறப்பு பெற்ற பிரபந்தங்களாகக் கருதப்படுகின்றன.

5. செங்கண் - பரமனின் திருக்கண்களானது, திவ்யப்பிரபந்தத்தில் பல இடங்களில் சுட்டப்பட்டுள்ளன ! அவை அழகும் வசீகரமும் கொண்டதோடன்றி, பரமனின் அருட் கடாட்சத்தை அடியார்களிடம் செலுத்தும் திரு அவயங்களாக அறியப்படுகின்றன ! ஆழ்வார்கள் பரந்தாமனின் திருக்கண்கள் மேல் பெருங்காதல் கொண்டவர்கள் !!! ஆண்டாளும், கண்ணனது கருணை பொழியும் கண்களை, திருப்பாவையில்

கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்* பங்கயக் கண்ணானை
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்* அங்கண் இரண்டும்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

என்று 5 இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

6. "கோவிந்தா" என்ற திருநாமம் திருப்பாவையில் மூன்று முறை (கூடாரை வெல்லும், கறவைகள் பின்சென்று, சிற்றஞ்சிறுகாலே வந்துன்னை என்று 3 பாசுரங்களில்) குறிப்பிடப்பட்டிருப்பது போல,

"நாராயணா" என்ற திருநாமமும்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த - "நாராயணனே நமக்கு பறை தருவான்" என்றும்
கீசுகீசென்று ஆனைச்சாத்தன் கலந்து - "நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்" என்றும்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் - "நாற்றத் துழாய் முடி நாராயணன்" என்றும்

மூன்று முறை வருகின்றன !

7. செல்வத் திருமால் - பரமன் ஆன ஸ்ரீநிவாசன், அளவிட முடியாத ஐசுவர்யங்களையும், அடியார்கள் பால் பேரன்பும், கருணையும் உடையவன், த்வய மந்த்ரத்தின் பூர்வப் பகுதியின் 'ஸ்ரீமத்' சப்தம் 'மாதவன்' என்று வரும் பாசுரத்தின் முதலடியிலும், உத்தரப் பகுதியினுடையது 'செல்வத் திருமால்' என்று வரும் கடைசி அடியிலும் வெளிப்படுவது சிறப்பு !

8. 'எங்கும் திருவருள் பெற்று" என்பது இம்மையிலும், மறுமையிலும் அவன் திருவருளை வேண்டுவதைக் குறிக்கிறது.

பாசுரச் சிறப்பு 2:

பரமன் வங்கக்கடலை கடைந்தது தேவர்களுக்கு அமுதம் எடுத்துத் தர மட்டுமல்ல, தனக்குரியவளான திருமகளையும் மீட்டெடுத்து தன் திருமார்பில் தரித்துக் கொள்ளவும் தான் :-) கருணை மாதாவான திருவை பரமன் தன் இதயத்திற்கு அருகில் வைத்துக் கொண்டதால், அடியவர்க்கும் நல்லது தான்.
பிராட்டியின் நெருக்கத்தால், பரமன் நமது குறைகளையும், பாவங்களையும் எளிதில் மன்னித்து விடுகிறான் ! தனக்குரிய அடியவரையும் (அவர் சிறியரோ பெரியரோ!) தனதாக்கிக் கொள்ளும் வல்லமை மிக்கவன் அம்மாயன்.

ஆண்டாள் அன்றே, "விஷ்ணுசித்தரின் மகள் பாடிய திருப்பாவைப் பாசுரங்களைப் பாடி, நோன்பு அனுசரிப்பவர்களுக்கு, செல்வத் திருமாலின் திருவருள் கிடைத்து, பேரின்ப நிலையைப் பெறுவர்" என்று சொல்லித் தான் திருப்பாவையை நிறைவு செய்தாள்! அவளுக்குக் கிட்டிய பேறு அவள் காலத்திற்குப் பின் வரும் மாந்தர்க்கும் கிட்ட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையிடம் இருந்தது! "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று ஆண்டாள் சொல்லிச் சென்று விட்டாள், திருப்பாவையை ஒரு சிறுமியாக தான் இயற்றியபோதே!

"ஈரிரண்டு மால்வரைத்தோள்" என்று ஆண்டாள் சொன்னதில் ஒரு சுவை இருக்கிறது! அதாவது, திருப்பாவையைத் தப்பாமல் உரைக்கும் அடியவரை, இரு கைகள் போதாது என்று பரந்தாமன் தனது நான்கு கைகளால் அரவணைப்பானாம்! அது போலவே, "திருமுகத்துச் செல்வத்திருமாலால்" என்று சொல்லும்போது, திரு(மகளின்) சம்பந்தத்தாலேயே பரமன் செல்வத் திருமால் ஆகிறான் என்பதை உணர்க! ஆக, திருப்பாவை ஓதும் அடியவர் லட்சுமி கடாட்சம் பெற்று இன்புறுவர்.

ஆண்டாள் ஒரு சாதாரணப் பெண்ணைப் போலவே தன் காதல் வெற்றிக்காக நேர்ந்து கொண்டாள்.

நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையானின்று வந்திவை கொள்ளும் கொலோ

என்று வேண்டுதல் மேற்கொண்டவள் [நாச்சியார் திருமொழியில்] திருவரங்கத்தில் போய் அரங்கனின் கருவறையில் கரைந்து விட்டாள். "நூறு அண்டா வெண்ணையும் நூறு அண்டா சக்கரைப்பொங்கலும்" என்ற அவளது நேர்த்திக் கடனை யார் செலுத்துவது? சில நூற்றாண்டுகள் கழிந்தன.

வைணவம் தழைக்க வந்த எந்தை ராமானுச முனி என்கிற எம்பெருமானார், (ஆண்டாள் தன் வேண்டுதலை நிறைவேற்றியிருப்பாளோ மாட்டாளோ என்ற) நெருடல் தாங்காமல் திருமாலிருஞ்சோலைப் பெருமாளுக்கான கோதையின் நேர்த்திக் கடனை தான் செலுத்தி விட்டு, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்றார். அப்போது ஆண்டாளின் அன்புக்குரிய தமையன் ஆனார்! அதனால் தான் இன்றும், ஆண்டாளுக்கு வாழி சொல்லும்போது "பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே" என்கிறோம்!

இவ்வாறாக, அப்பரமனையே தனது உடைமையாக்கிக் கொண்டு, உரிமையை என்றைக்குமாகத் தக்க வைத்துக்கொண்ட சூடிக் கொடுத்த சுடர்கொடியின் திருப்பாவைப் பாசுரங்களில் காணப்படும் கடலை ஒத்த பேரன்பும், பிரவாகமாக பெருக்கெடுக்கும் பக்தி ரசமும், கவிதை நயமும், அழகியல் உணர்வும் தனித்துவமானவை.

ஒரு தெய்வப் பெண்ணின் காலத்தினால் அழியாத தமிழ்ப் புலமைக்கும், கவித்துவத்திற்கும் நாம் தரும் மரியாதைக்கும் கௌரவத்திற்கும் இன்றளவும் சாட்சிகளாக, வருடாவருடம் நடக்கும் திருவில்லிபுத்தூர் உத்சவமும், தைலக்காப்பும், பிரியாவிடை சேவையும் விளங்குகின்றன என்றால் அது மிகையில்லை!

திருப்பாவை முடிவுரை:

இந்த பாசுரத்துடன் திருப்பாவை நிறைவுக்கு வருகிறது. நம்மால் முடியுமா என்று சந்தேகத்துடன் தான் இந்த மார்கழி மாதம், திருப்பாவை விளக்கப் பதிவுகள் எழுதத் தொடங்கினேன். பல பெருந்தகைகளின் உரைகளும், ஆண்டாள், திருப்பாவை பற்றி வாசித்தவையும், கேட்டவையும், எனது திருப்பாவை முயற்சிக்கு பெரும் உதவியாக அமைந்தன.

நான் எழுதியதில், சித்தாந்தம் மற்றும் வைணவ ஆசார்யர் விளக்கங்களுக்கு மாறாக, ஆன்மிக அன்பர்கள் மனம் புண்படும்படியாக, இன்னும் அறியாத வகையிலாக, எதாவது குறைகள் எனது திருப்பாவைப் பதிவுகளில் நலிந்தும் வலிந்தும் ஏற்பட்டிருக்குமேயானால், மன்னிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். சுட்டினால், அவற்றைத் திருத்திக் கொள்கிறேன்.

இந்த மார்கழியில், திருப்பாவை சொன்னவர்கள், கேட்டவர்கள், வாசித்தவர்கள், எழுதியவர்கள் என்று எல்லோருக்கும் கோதை நாச்சியாரின் திருவருளும், அவள் உகந்த கண்ணபிரானின் திருவருளும் பரிபூர்ணமாக கிடைக்கட்டும். அது போலவே, அனைவரும் எல்லா செல்வங்களையும் பெற்று, பெருவாழ்வு வாழ ஆண்டாளைப் பிரார்த்திக்கிறேன்.

திருப்பாவை சிறப்பு:

ஆண்டாளைப் பற்றியும், அவள் பாடிய திருப்பாவையின் சிறப்பு பற்றி அவளை வாழ்த்திய வாழ்த்துரையும் பிற்காலத்தில் ஆன்றோர்களால் இயற்றப்பட்டு இன்றும் பாடப்பட்டு வருகின்றன.

வேதப்பிரான் பட்டர் அருளியவை

கோதை பிறந்தவூர் கோவிந்தன வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றுமூர் - நீதியால்
நல்ல பத்தர் வாழுமூர் நான்மறைகளோ துமூர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும் - கோதைதமிழ்
ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.

ஸ்ரீ மணவாளமாமுனிகள் தன்னுடைய உபதேச ரத்தினமாலையில் ஆண்டாளை இவ்வாறு புகழ்கிறார்

இன்றோ திருவாடிப்பூர மெமக்காக
அன்றோவிங் காண்டா ளவதரித்தாள் - குன்றாத
வாழ்வாக வைகுந்த வான்போகந் தன்னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய். (22)

ஆடிமாதம் பூர நக்சத்திரம் இன்றுதானோ எங்களுக்காக என்று என்னும்படி
குறையாத வாழ்வு உண்டாகும்படியாக ஸ்ரீவைகுண்டத்திலுள்ள
உயர்ந்த அநுபவத்தை அளித்து, பெரியாழ்வார்க்கு திருமகளாக
இவ்வுலகத்தில் ஆண்டாள் அவதரித்தாள்.

பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்
குண்டோமனமே யுணர்ந்துபார் ஆண்டாளுக்
குண்டாகி லொப்பிதற்கு முண்டு (23)

பெரியாழ்வாருடைய மகளாகிய ஆண்டாள் பிறந்த
ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் வைபவம் வேறெரு தினத்திற்கு
உண்டோமனமே உணர்ந்துப்பார். ஆண்டாளுக்கு
ஒப்பு ஆண்டாளே.

அஞ்சு குடிக்கொரு(*) சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் - பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து (24)

ஐந்து ஆழ்வார்களுக்கும் சந்ததியாய் அவர்களுடைய
செயலை விஞ்சும் அளவிற்கு இளைமையிலிருந்தே
பக்குவமான ஆண்டாளை பக்தியுடன் எப்போது
மகிழ்ச்சியாக துதிப்பாயாக.

(*)அஞ்சு குடி - 1. முதல் ஆழ்வார்கள் ( பொய்கையாழ்வார், பூததாழ்வார், பேயாழ்வார்), 2. திருமழிசை

ஆழ்வார், 3. நம்மாழ்வார், 4. குலசேகர ஆழ்வார், 5. பெரியாழ்வார் - ஆகிய ஐந்து ஆழ்வார்களை குறிக்கிறது.

தேசிகன் பிரபந்தம் - ஸ்ரீ வேதாந்த தேசிகன் அருளியவை

வேயர்புகழ் வில்லிபுத்தூர் ராடிப்பூரம்
மேன்மேலும் மிகவிளங்க விட்டுசித்தன்
தூயதிரு மகளாய் வந்த ரங்கனார்க்குத்
தூழாய்மாலை முடிசூடித் கொடுத்த மாதே!
நேயமுடன் திருப்பாவை பாட்டாறந்தும்
நீயுரைத்த தையொரு திங்கட்பாமாலை
ஆயபுகழ் நூற்றுநாற்பத்து மூன்றும்
அன்புடனே யடியேனுக்குகருள் செய்நீயே

வாழி திருநாமம்:

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே.

சூடிக் கொடுத்த நாச்சியார் திருவடிகளே சரணம் !
ஆசார்யர் திருவடிகளே சரணம்
ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீமதே நாராயணாய நம:
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து:

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 284 ***

Tuesday, January 13, 2009

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து ! - TPV29

திருப்பாவையின் 29வது பாசுரம்

உன் மீது பற்று கொண்ட எங்களுக்கு மற்ற பொருள்கள் மீது இச்சை ஏற்படாமல் காப்பாயாக!

மலயமாருதம் ராகம், ஆதி தாளம்.
Photobucket - Video and Image HostingPhotobucket - Video and Image Hosting
சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து* உன்-
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்*
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து *நீ-
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது*
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா*
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் *உன் தன்னோடு-
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்*
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்
Photobucket - Video and Image HostingPhotobucket - Video and Image Hosting
பொருளுரை:

மிக்க விடியற்காலைப் பொழுதில் உன்னிடத்திற்கு வந்து உன்னை வணங்கி உனது தங்கத் தாமரை ஒத்த திருவடிகளை மங்களாசாசனம் செய்ய நாங்கள் வந்திருப்பதன் நோக்கத்தை நீ கேட்பாயாக ! மாடுகளை மேய்த்து அவை உண்ட பின் உண்ணுகின்ற குலத்தில் பிறப்பெடுத்த நீ எங்களின் பணிவிடைகளை ஏற்காமல் செல்லுதல் ஆகாது !

ஓ கோவிந்தனே ! இன்று உன் அருளை (பறை) பெறுவது மட்டும் எங்கள் விருப்பமன்று. என்றென்றும், ஏழேழு பிறப்புகளிலும் உன்னோடு பொருந்தியவராக, உனது நெருங்கிய உறவினராக நாங்கள் இருக்க அருள்வாயாக ! உனக்கு மட்டுமே அடிமை செய்பவராக நாங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் ! இவற்றுக்கு மாறுபட்ட எங்கள் ஆசைகளை நீக்கி அருள வேண்டும் !

பாசுரச் சிறப்பு:

'நாராயணனே நமக்கே பறை தருவான்' என்று முதல் பாசுரத்தில் உரிமையோடு சொன்ன ஆண்டாள், இந்த 29-வது பாசுரத்தை, "எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் .... உனக்கே நாமாட் செய்வோம்" என்று தெளிவான நோக்கத்தோடு அறுதியிட்டு நிறைவு செய்கிறாள்!

எளிமையாகச் சொன்னால் -- பரமனிடம் அடியவர் கூட்டத்துடன் சரணாகதி, அவனுக்கு பல்லாண்டு பாடுதல், அவன் அருளும் மோட்சம், பின் சதாசர்வ காலமும் பகவத் சேவை -- இது தான் கோதையின் பிரபந்த சாரம்.

இந்த பாசுரம் பகவத் தாஸ்யத்தை (இறையடிமை செய்தல்) போற்றுகிற பாசுரம். பதினைந்தாம் பாசுரமான "எல்லே இளங்கிளியே" பாசுரத்தில் பாகவத தாஸ்யம் (அடியார்க்கு அடிமை செய்தல்) சொல்லப்பட்டது. இரண்டுமே, திருப்பாவைக்கு பெருமை சேர்க்கும் பாசுரங்களாக வைணவப் பெருந்தகைகளால் போற்றப்படுபவை.

ஆண்டாள் 29வது பாசுரத்தில், திருப்பாவை முடியும் தறுவாயில், "சிற்றஞ்சிறுகாலே" என்கிறாளே. அப்படியானால், அவள் (6-15 பாசுரங்களில்) கோபியர் ஒவ்வொருவராக துயிலெழுப்புகிறாளே, அக்காலை மிக மிக அதிகாலையாக இருந்திருக்குமே! அதாவது, இரவெல்லாம் தூங்காமல், விடியலுக்கு முன்னமே நோன்புக்கு வேண்டிய ஆயத்தங்கள் அனைத்தும் செய்து, கோபியர் கூட்டத்தை துயிலெழுப்பி, வாயிற்காப்பானைக் கெஞ்சி, ஆச்சார்யன் உபதேசமும் பிராட்டியின் கருணையும் பெற்று, விவேகம் சற்றே வாய்க்கப் பெற்று, செய்வன செய்யாதன புரிந்து, நோன்பை நெறி பிறழாமல் நிறைவு செய்து, மிக வருந்தி இவ்வளவு காரியங்கள் செய்தும், 'சிற்றஞ்சிறுகாலே' கண்ணனிடம் ஓடோடி வந்து விட்ட விஷயத்தை எவ்வளவு நயமாக கோதை நாச்சியார் நமக்கு குறிப்பில் உணர்த்தி விடுகிறாள், பாருங்கள்!

பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது --


கண்ணனைப் பார்த்து "(மேலே சொன்னபடி) மிகவும் கஷ்டப்பட்டு உன்னைச் சரணடைந்தேன். ஆகவே, உன் தாமரைத் திருவடிகளை போற்றுவதற்கான காரணத்தை நீ கேட்டே ஆக வேண்டும். நீ எங்கள் குலத்தில் வந்து உதித்தவன். அதற்காகவேனும், நான் சொல்ல வருவதை நீ கேட்டுக் கொண்டாக வேண்டும்!!! எனக்கும் வேறு கதியில்லை. என் குற்றேவலை நீ கொள்ளத் தான் வேண்டும்" என்று தன்னை ஒரு கோபியாக எண்ணிக் கொண்டு சூடிக் கொடுத்த நாச்சியார் குறிப்பால் சொல்வது நயத்திலும் நயம்!

"பொற்றாமரையடியே போற்றும்" என்று ஏகாரமாகச் சொல்லும்போது, வேறு ஒருவரையும் அண்டாமல், கண்ணன் திருவடிகளை மட்டுமே நாடி வந்தது குறிப்பில் உணர்த்தப்படுகிறது. இங்கு "குற்றேவல்" 'பரமனுக்கு தம் சக்திக்கு ஏற்ற அளவில் சேவை' என்பதை பொருளாகக் கொண்டுள்ளது.

'இற்றைப்பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா,
எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் உந்தனோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று'


ஆண்டாள் தான் வேண்டிய கண்ணனுடனான நெருக்கத்தையும், அவனுக்கு தொண்டு செய்து அவனை விட்டுப் பிரியாமல் இருக்கும்படியான தன் ஆசையையும், இதுவரை பூடகமாக 'பறை வேண்டும்' என்று தான் சொல்லி வந்தாள்! நோன்புக்கு "பறை வேண்டும்" எனபது பரமன் அருகே செல்ல ஒரு சாக்கு தான். இப்போது தெளிவாக தன் விருப்பத்தை முன் வைக்கிறாள். பரமபதத்தின் கடைநிலைக்கு வந்தாகி விட்டது, இனி பரமனோடு எந்தவித ஒளிவுமறைக்கும் அவசியமில்லை என்று கோதை நினைத்தாள்!

சென்ற பாசுரத்தில் "உன்னுடனான உறவைப் பிரிக்கவே முடியாது" (உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது!) என்று பாடியவள் இப்பாசுரத்தில் ஒரு படி மேலே போய், "கண்ணா! எக்காலத்திலும் (ஏழேழ் = 49 பிறவிகளிலும்!) நீயே எங்கள் உறவு, உனக்கு மட்டுமே நெருக்கமானவராக இருந்து கொண்டு, உனக்கு மட்டுமே ஊழியஞ் செய்து கொண்டு உடன் இருப்போம்! இதற்கு நீ அருள வேணும்! இந்த நோக்கத்திலிருந்து எங்கள் மனம் திரும்பாமல் இருக்கும்படியான வைராக்கியத்தை எங்களுக்கு அளிப்பதும் உன் சித்தமே" என்று கோபியர் சொல்வதாக கோதை நாச்சியார் சாதுர்யமாக எல்லா பொறுப்புகளையும் அப்பரமன் மேலேயே சுமத்தி விடுகிறாள் :-)

'எற்றைக்கும்' என்பது எக்காலத்திலும் (வைகுண்டத்தில் பகவத் சேவை செய்தல்)
'ஏழேழ் பிறவிக்கும்' எனும்போது, பரமன் பூவுலகிற்கு அவதாரமெடுத்து வரும்போதும், அவனுடனே வந்து தொண்டு செய்தல்! இலக்குமணனைப் போல, அனுமனைப் போல, பலராமனைப் போல, அச்சூழலில் எத்தனை பிறவி எடுக்கவும் கவலையில்லை! அதாவது, கணநேரமும் பிரியாதிருத்தல். அதனால் தான் ஆண்டாள் நயமாம "எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு" என்று பாடுகிறாள்!

'எல்லாம் உன்னாலேயே கிடைக்க வேண்டும், நீயே சரணம்' என்று கண்ணனிடம் சரணாகதி செய்கிறாள் ஆண்டாள்.

பாசுரச உள்ளுரை:

1. இப்பாசுரத்தில் (திருப்பாவையில்) மூன்றாவது முறையாக கோவிந்த நாமம் (இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா) எழுப்பப்படுகிறது. இதற்கு முன், 27வது பாசுரத்தில், "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா" என்றும், 28வது பாசுரத்தில் "குறைவொன்றும் இல்லாத கோவிந்தா" என்றும் பாடப்பட்டதை நினைவு கூர்க ! பொதுவாக, சங்கல்பத்தின் போது, "கோவிந்தா கோவிந்தா கோவிந்தா" (3 முறை) என்று சொல்வது மரபு. மேலும், 'கோவிந்தா' என்ற சொல்லினுள் 'கோதா' இருப்பதும் குறிப்பிடத்தக்கது !

2. இப்பாசுரத்துடன், கோதை நாச்சியார், கோபியர் பாத்திரத்தில் கிருஷ்ணனிடம் திருப்பாவையில் வேண்டுவதை முடித்துக் கொள்கிறார். கடைசி பாசுரத்தில் (வங்கக் கடல் கடைந்த மாதவனை), ஆண்டாளாகவே பாடி, திருப்பாவையை நிறைவு செய்கிறார் !

3. நோன்புக்காக பறை வேண்டுவதின் சரியான அர்த்தம் இப்பாசுரத்தில் வெளிப்பட்டுள்ளது. அதாவது
(i) உன் திருவடிகளில் கைங்கர்யம் செய்திருத்தல்
(ii) உன்னை விட்டுப் பிரியாதிருத்தல்
(iii) மேற்கூறிய இரண்டுக்கும் ஒவ்வாத ஆசைகளை / எண்ணங்களை நீக்க வேண்டுதல்
ஆகியவையே ஆகும்.


4. இப்பாசுரத்தில், சொரூப விரோதியும், பிராப்ய விரோதியும் விலகுவது சொல்லப்பட்டுள்ளது.

5. த்வயத்தின் முற்பகுதியான உபாய சொரூபம் சென்ற பாசுரத்தில் (கறவைகள் பின் சென்று) வெளிப்பட்டது. இதில், பிற்பகுதியான உபேய சொரூபம் (பரம்பொருள் வடிவம்) வெளிப்படுகிறது !

6. 'சிற்றஞ்சிறுகாலை'யே எம்பெருமானைக் குறித்த ஞானம் / பக்தி மிகும் சமயம் என்பதாலேயே, ஆண்டாள் அந்த நேரத்தை, பரமனைப் பற்றி வணங்க வெண்டிய பொழுதாகப் பாடியுள்ளார் என்று பெரியோர் உரைப்பர். ஹரிநாம சங்கீர்த்தனத்திற்கு உகந்த நேரமும் அதுவே !

7. போற்றும் - எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காது பல்லாண்டு பாடுதலைக் குறிக்கும்

8. குற்றேவல் செய்தல் - பரமன் இட்ட ஏவலைச் செய்தல், நம்மாழ்வார் கூறியது போல, 'ஒழுவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை' செய்தல் !!!

9. 'உன்றன்னோடு உற்றோமேயாவோம்' என்பது மூல மந்திரத்தில் பிரணவத்தையும், 'உனக்கே நாமாட் செய்வோம்' என்பது நாராயண சப்தத்தையும், 'மற்றை நம் காமங்கள் மாற்றேலோ' என்பது 'நம' சப்தத்தையும் உள்ளர்த்தங்களாகக் குறிக்கின்றன. ஆக, முழு வாக்கியமும் சேர்ந்து "ஓம் நாராயணாய நமஹ" என்ற அஷ்டாட்சர மந்திரத்தை குறிக்கிறது.

10. மொத்தத்தில், கோபியர் பரமாத்வான கிருஷ்ணனிடம் மோட்ச சித்தி ஒன்றை மட்டுமே பாவை நோன்பின் வாயிலாக வேண்டி வணங்கிக் கேட்கின்றனர்.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 283 ***

கறவைகள் பின் சென்று - TPV28

திருப்பாவையின் 28வது பாசுரம்

சென்ற பாசுரத்தில் (கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!) கோபியர், ஆபரணங்கள், ஆடைகள், பால் சோறு போன்றவற்றைக் கண்ணனிடம் கேட்டதால், அம்மாயவன், "நீங்கள் அழியக்கூடிய சிற்றின்பங்களை என்னிடம் வேண்டுவது போல் தோன்றுகிறதே" என்று புன்னகைக்க, கோபியர் அதற்கு பதிலாக, தங்களது உள்ளார்ந்த விருப்பம், கண்ணனுக்கு கைங்கர்யம் செய்து எப்போதும் அவன் உடன் இருப்பதே என்று கூறுவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது சிறப்பு !

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்

அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்

பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்

குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன் தன்னோடு

உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்

சிறு பேரழைத்தனவும் சீறி யருளாதே

இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.


பொருளுரை:

Photobucket - Video and Image Hosting Photobucket - Video and Image Hosting
பசுக்களை மேய்த்து, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்டு உடல் வளர்ப்பவர்களும், ஞானமிலாத சொற்ப அறிவு படைத்தவர்களும் ஆன நாங்கள், எங்கள் (ஆயர்) குலத்தவனாக உன்னைப் பெற்றடைய பெரும் புண்ணியத்தைச் செய்துள்ளோம். யாதொரு குறையும் இல்லாத 'கோவிந்தன்' என்னும் பெயரினைக் கொண்ட கண்ணபிரானே!

Photobucket - Video and Image Hosting Photobucket - Video and Image Hosting
உன்னுடன் நாங்கள் கொண்டுள்ள உறவை யாராலும் எக்காலத்திலும் பிரிக்க முடியாது. அற்ப அறிவுடைய, சூதுவாது தெரியாத சிறுமியரான நாங்கள், உன்னிடம் கொண்டுள்ள மிகுந்த அன்பினால் உன்னை (நாராயணன், மாயன், மாதவன் போன்ற பெயர்களிட்டு) ஒருமையில் அழைத்தமைக்கு கோபித்துக் கொள்ளாமல், நாங்கள் வேண்டி வந்த பொருட்களை நீ தந்தருள்வாயாக !

பாசுரச் சிறப்பு:


"கோவிந்தா"வில் வரும் "கோ" என்பதற்கு பூமி, புலன், சொர்க்கம், மோட்சம், பசு, வேதம் என்று பல பொருள்கள் உள்ளன. கோவிந்தன் இவை அத்தனைக்கும் அதிபதி, அவற்றை அருள வல்லவன்.

திருவேங்கடம், சிதம்பரம், ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற 3 திவ்ய தேசங்களில் பரமன் கோவிந்தன் என்ற திருநாமம் பெற்றிருக்கிறான் என்பது குறிப்பிட வேண்டியது.

சரணாகதித்துவத்தின் பெருமையை இப்பாசுரம் சொல்வதை விட அருமையாக விளக்க முடியாது.

கண்ணனுக்குத் தர தங்களிடம் ஏதும் இல்லை என்ற தங்கள் "கை முதல் இல்லா" தன்மையை கோபியர் "கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்" என்று முதலடியிலேயே சொல்லி விடுகின்றனர்! ஒரு விதத்தில் ஆண்டாள் நாச்சியாரின் ஆற்றாமை இப்பாசுரத்தில் இழையோடுகிறது. "இறைவா" என்ற (முதன்முறையாக ஆண்டாள் பயன்படுத்தும்) சொல்லாட்சியைக் கவனிக்கவும்! "இன்னும் என்ன செய்தால் என்னை ஏற்றுக் கொள்வாய்?" என்று கண்ணனிடம் வேண்டுகிறாள்!

வைணவ ஆச்சார்யர்களின் சம்பந்தம் ஏதும் இல்லாததால், தங்களுக்கு பகவத் விஷய ஞானம் இல்லை என்பதையும் "அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து" என்று சொல்லி ஒப்புக் கொள்கின்றனர். தாங்கள் பசுக்களை மேய்க்கும் சிறுதொழில் செய்து வாழ்பவர்கள் என்றும், ஆதலால் பகவத்-பாகவத சேவை என்று பெரிதாக எதுவும் செய்யாதவர்கள் என்றும் கூட கண்ணனிடம் மனம் விட்டுச் சொல்கின்றனர்!

"நீ யாதவ மணியாக எங்கள் குலத்தில் அவதரித்தது மட்டுமே நாங்கள் பெற்ற ஒரே பெரும்பேறு, அதனாலேயே நாங்கள் பெரும் புண்ணியம் பெற்றவராகி விட்டதாக நினைக்கிறோம். மற்றபடி, நாங்கள் செய்த எதுவும் புண்ணியத்தில் சேராது. உனது அருமை பெருமைகளைப் பற்றி புரிந்து கொள்ளும் அளவுக்கு எங்களுக்குத் திறனில்லை. தகுதியுமில்லை. ஆனாலும், நீ ஒருவனே குற்றமற்றவன், குறையற்றவன் என்ற ஒரு விஷயத்தை எப்படியோ உணர்ந்து கொண்டோம், திடமாக நம்பினோம்!

உன்னோடான எங்கள் உறவு மட்டுமே அழிவில்லாதது என்பதை புரிந்து கொண்டு விட்டோம். உன்னை எங்களில் ஒருவராக எண்ணி, அன்பின் காரணமாக உண்டான சுவாதீனத்தால் (உரிமையால்) மட்டுமே, உனக்குத் தர வேண்டிய மரியாதையைத் தராமல் இருந்திருக்கிறோம். உன்னையே கேலி செய்திருக்கிறோம்! அவை தவறு என்று கூட பேதைகளான நாங்கள் உணர்ந்ததில்லை, உன்னிடம் மன்னிப்பும் கேட்டதில்லை. ஆனால் உன் மேல் கொண்ட பேரன்பும் பரமபக்தியும் என்றும் மாறாது.

எங்கள் அறியாமையால், உன்னைச் சரணடைவதே கதி என்பது புரிய எங்களுக்கு இத்தனை காலமாகி விட்டது! எங்கள் கர்ம ஞான பக்தியில் குறைவிருக்கலாம். ஆனால், உந்தன் கருணைக்கு குறைவுண்டோ? எங்கள் குற்றம் குறைகளை மன்னித்து, நாங்கள் விரும்புவதை அருளி, எங்களை உன்னுடன் சேர்த்துக் கொள்" என்று சரணாகதியின் உன்னதத்தை கோபியர் வெளிப்படுத்துவதாக கோதை நாச்சியார் இயற்றியுள்ள இப்பாசுரம், வைணவப் பெருந்தகைகளால், மிகவும் சிலாகிக்கப்பட்ட ஒன்றாகும்!

பரமனைப் பற்ற அடியவருக்கு வேண்டியது பேரன்பு மட்டுமே, பக்தியும், ஞானமும், வழிபாட்டு முறையைப் பேணும் சம்பிரதாயமும் கூட அவ்வளவு முக்கியமில்லை என்பதை ஆண்டாள் அருமையாக உணர்த்தியுள்ளாள்!

பாசுர உள்ளுரை:

1. இப்பாசுரத்தில் கோபியர்

ஆகிஞ்சன்யம் (கை முதல் இல்லாமை, பரமன் ஒருவனே உபாயம் என்ற உணர்தல்) இல்லாத (கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்),

நைச்சியம் (தங்கள் சிறுமையை உணரும் அறிவு) அறியாத (அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து),

பரமனின் சௌலப்யம் (அனைத்து அடியவராலும் சுலபமாக அடையத் தக்கவன்) புரியாத போதும் வரமருளப்பட்ட (உந்தன்னைப் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்),

பரத்துவம் விளங்காத (குறைவொன்று மில்லாத கோவிந்தா!),

ஜீவாத்மா-பரமாத்மாவுக்கும் உள்ள சம்பந்தம் பற்றிய அதிக ஞானமில்லாவிட்டாலும் கண்ணனின் உறவே நிரந்தரம் என்பது மட்டும் புரிந்த (உன் தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது),

தாங்கள் செய்த தீவினையின் பலன்களை விலக்க பரமனிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்பது கூட உணராவிட்டாலும் அவனை நாடி வந்த (அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச் சிறு பேரழைத்தனவும் சீறியருளாதே),

கண்ணன் ஒருவனே உலக ரட்சகன், சரணாகதிக்கு வேண்டியதையும் அவனாலேயே அருள முடியும் போன்றவை விளங்காவிட்டலும், அவன் திருவடிகளே காப்பு என்ற நம்பிக்கையுடன் வந்த (இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்)

பரமபக்தி கொண்ட பேதைகளாக தங்கள் குணநலங்களை குறிப்பில் உணர்த்துகின்றனர்.

2. இப்பாசுரத்தில் கோபியர் மூன்று முறை, பேரன்பில் கண்ணனை விளிக்கின்றனர். அதாவது,
உன்றன்னைப் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
உன்றன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அன்பினால் உன் தன்னைச் சிறு பேரழைத்தனவும் சீறி யருளாதே

3. "உன்றன்னோடு உறவு" -- பரம்பொருளுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள உறவு 9 வகைப்பட்டது. அவை
தந்தை - மகவு
ரட்சிப்பவன் - ரட்சிக்கத்தக்கவன்
உரிமையுள்ளவன் - உரிமையாகும் பொருள்
தாங்குபவன் - தாங்கப்படத் தக்கவன்
அறியப்படுபவன் - அறிபவன்
பொருளுடையான் - பொருள்
தாங்கும் பொருள் - தாங்கப்படும் பொருள்
சரீரி (சூட்சமம்) - சரீரம் (ஸ்தூலம்)
அனுபவிப்பவன் - அனுபவிக்கப்படுவது


4. குறையொன்றும் இல்லாத கோவிந்தா - பெருமாளின் குணபூர்த்தியை உணர்த்துகிறது

5. இப்பாசுரத்தில் த்வயத்தின் முற்பகுதியான உபாய சொரூபம் வெளிப்பட்டுள்ளது ! அதாவது, அடியார்கள் (பரமனைச் சேர) தாங்கள் செய்யவிருப்பதை பெருமாளிடம் தெரிவிப்பதைக் குறிக்கிறது.

6. நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய் - மோட்ச சித்தியைப் பெற்று பகவத் கைங்கர்யம் செய்ய விழைவதை உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 282 ***

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails